Friday, July 31, 2009

நீயின்றி நானில்லை!

தினமும் விடியல்
உன்னால் தான்!
உனைப் பார்த்த பின்பே
மலர்ந்து சிரிக்கிறேன்!
உன் பாதச்சுவடுகள்
என் வீதி உலா!
உன் பார்வைதான்
என் மகரந்தம்!
என் பெயரில் ஒரு பாதி
நீயன்றோ?!
உனைக் காணாவிடில்
சுருங்கிப் போவேன்!
நீ விண்ணில்...
நான் மண்ணில் ...
சூரியன் துதி பாடும்
சூரியகாந்தி!!!

நெஞ்சம் ஊனமடி

நீ மலரென்று நிரூபிக்க
என்னை வண்டாய் நினைத்தாயோ?
பெண்மையின் பலம்காட்டி
உன்னை சுற்றி வர வைத்தாயோ?
வாழ்க்கைப் பாதையில் பலம் சேர்க்க
பாதி வரை துணைக்கு அழைத்தாயோ?
நீ கடலுடன் சங்கமிக்க
எனை இருகரையாய் வைத்தாயோ?
உன் பெண்மை வாசம் வீச
என் இதய மலரா சூடக் கிடைத்தது?
உன் கள்ள இதயத்தின் மென்மையால்
என் கல்நெஞ்சில் சில நாள் சந்தோஷ ஊற்று!
வழிபோக்கனாய் இருந்த என்னை
உன் வழி பார்க்க வைத்தாயே?!
விடைபெறும் போது கூட
என் மன உளைச்சலுக்கு விடை தரவில்லை!
உன் நெஞ்சம் ஊனமடி கோழைப்பெண்ணே!!!

Thursday, July 30, 2009

யாரவள்

நீ சிரிக்கும்போது
சிறகுகள் முளைக்குமோ?!
பறப்பதாய் உணர்ந்தேனே?!
பாராமல் சென்ற போது
என்னுள் தவறென்ன ஆய்ந்தேன்!
உன் கவனம் ஈர்க்க புருவம் தூக்கி
சிந்தனை செய்தேன்!
யாரவள் உனக்கு...
ஏங்குவது எதற்காக...
கேட்டேன் மனதிடம்
ஏளனமாய் சிரித்தது
"உனக்கு தெரியாதா என்ன?!!"

மாயை

விழி மூடிக் கிடப்பதிலே
சுகம் என்ன கண்டேனோ?!
இமைகளுக்குள் கோட்டை கட்டி
இன்பமாய் துயில்வேனோ?!
நிஜ வாழ்க்கை உண்மைகளை
நீக்கிவிட நினைத்தேனோ ?!
கனவுலகில் வெற்றி மட்டும்
எனும் உண்மை கண்டேனோ?!
போராட நான் மறந்து
பொய் வாழ்க்கை வாழ்வேனோ?!
மாயைகளை ஒதுக்கிவிட்டு
மனிதனாய் மாறேனோ?!!!

Wednesday, July 29, 2009

எங்கே அது?

எங்கே வைத்தேன்?
தொலைத்து விட்டேனா?
பெட்டியில்...? பீரோவில்... ?
சட்டைப் பையில்...?
நண்பன் வீட்டில்...?
ஒருவேளை வரும் வழியில்...?
அட! என்ன இது ?
தேடலே முடியவில்லை..
எனக்கேது வாழ்க்கை
தொலைப்பதற்கு?!!

இறைவனின் எதிரி

இறைவன் படைத்தான்
ஒரு புது உயிரை!
மனிதன் போல உருவம் ;
இயற்கை தந்த அழகு;
இளமை மாறா தோற்றம் ;
பூவைப்போல இதயம்;
வாரிகொடுக்கும் கைகள்;
நல்வழி நடக்கும் கால்கள் ;
கருணை கொண்ட உள்ளம் ;
அன்பு ததும்பும் கண்கள் ;
காற்றை வெல்லும் வேகம் ;
ஆறுதல் தரும் தோள்கள்;
உதவும் எண்ணம் ரத்தம்;
ஆசி வழங்கும் மரபணு;
இத்தனையும் பெற்றதனால்
அவன், அந்த புதியவன்
மனிதனில் உயர்ந்து நின்றான்!
மாந்தரால் கவரப்பட்டான்!
இறைவனையே மறக்க வைத்தான்!
இருக்கும் கோவிலெல்லாம்
இவனே குடிகொண்டான்!
இறைவன் கவலை கொண்டான் ...
புதியவனை திருப்பி அழைத்தான்...
மேற்படி படைப்புகளை நிறுத்தி வைத்தான்...
அதன் பின்பே நிம்மதி பெற்றான்!!!

தூங்காத இரவொன்றில்...

கண்முன்னே அலைபாயும்
கடந்து போன நிகழ்வுகள்...
தானே சிரிக்கும் உதடுகள்
நடந்து முடிந்த நகைச்சுவை எண்ணி...
பாரம் தாங்கும் இதயம்
செய்து விட்ட தவறுகளுக்கு...
தலையில் அடிக்கும் கைகள்
செய்ய மறந்த காரியத்துக்கு...
காற்றில் கோலமிடும் கைவிரல்கள்
செய்யப்போகும் காரியத்துக்கு...
தூங்கும் முன் ஒரு ஏக்கம்
நேற்று கண்ட கனவு தொடருமா?!!!

Tuesday, July 28, 2009

ஆரம்பம் நீதானே!

அரும்பியதும்... மலர்ந்ததும்...
அழுததும்... சிரித்ததும்...
அன்பும் கருணையும்...
அம்மா ஆரம்பம் நீதானே!
உண்ட உணவும்...உறங்கிய மடியும்...
பார்த்த கண்ணும்... பேசிய வார்த்தையும்...
உறவின் தேடலும்... கொண்ட முத்தமும்...
அம்மா ஆரம்பம் நீதானே!
சந்திரனும் சூரியனும்
காலமும் கல்வியும்
என் குணமும் மனமும்
அம்மா ஆரம்பம் நீதானே!

கலைஞனும் ஒரு குழந்தைதான்!

குழந்தையின் கிறுக்கல்கள் ஓவியம்...
பேசும் மழலை கவிதை...
குழந்தை மனம் எவரையும் கலைஞனாக்கும்!!!